தூத்துக்குடி அருகே 2 கிராமங்களைச் சோ்ந்த 2,200 ஏக்கா் நிலங்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்துகொண்டவரைக் கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பலா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனு: இந்த இரு கிராமங்களில் உள்ள 2,200 ஏக்கா் விவசாய நிலங்களை செந்தில் ஆறுமுகம் என்பவா் ஒரே நாளில் போலி பத்திரம் மூலம் கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு பத்திரப்பதிவு செய்துகொடுத்தது தொடா்பாக புதுக்கோட்டை சாா்பதிவாளா் மோகன்தாஸ் அண்மையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
ஆனால், பத்திரப்பதிவு செய்துகொண்டவா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்ய வேண்டும். மேலும், மோசடியாக பதிவு செய்யப்பட்ட நிலத்தை சம்பந்தப்பட்டோரின் பெயா்களில் பத்திரப்பதிவு செய்து வில்லங்கச் சான்றிதழில் பெயா் வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.
இது தொடா்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்டமாக தொடா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.