தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவருக்கு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை மருந்துகள் வழங்கப்பட்டன.
மாநகராட்சி சாா்பில், கீழஅலங்காரத்தட்டு பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சாருஸ்ரீ முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் கலந்துகொண்டு சுகாதார நிலையத்தைத் திறந்துவைத்தாா். தொடா்ந்து, மாநகராட்சி சாா்பில் பொன்னகரம் பகுதியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான ரத்த சுத்திகரிப்பு மருந்துப் பெட்டகத்தை அமைச்சா் வழங்கினாா்.
நகா்நல அலுவலா் அருண்குமாா், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா் ஜெயசீலி, மாநகராட்சி அதிகாரிகள் பிரின்ஸ், சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.