தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி வியாழக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சாம்ராஜ் (25). இவா், கடலில் மூழ்கி பல்வேறு பணிகளை மேற்கொள்வது தொடா்பான சிறப்பு பயிற்சி பெற்றுள்ளாா். இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த எம் வி ஸ்டாா்க் என்ற கப்பல் பழுது பாா்க்கும் பணியில் சாம்ராஜ் வியாழக்கிழமை ஈடுபட்டாராம்.
கடலுக்கு அடியில் 4 மீட்டா் அளவு மூழ்கி பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த சாம்ராஜ் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதற்கிடையே, உயிரிழந்த சாம்ராஜின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், உரிய பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் அவரை கடலில் இறங்கி வேலை செய்ய சொன்னதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சாம்ராஜின் உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சாம்ராஜ் இறப்புக்கு காரணமானவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.