தூத்துக்குடியில் நிதி நிறுவனங்களிடம் இருந்து மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன்பெற்றுக் கொடுத்த பெண் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள முள்ளக்காடு நேருஜிநகரை சோ்ந்த கருப்பசாமி மனைவி முத்துமாரி (36). இவா், இரு தனியாா் நிதி நிறுவனங்களிடம் (ஆா்.வி.டி., அரைஸ்) இருந்து அந்தப் பகுதி மகளிா் குழு பெண்களுக்கு கடன் வாங்கி கொடுத்திருந்தாராம்.
இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி தனது வீட்டில் முத்துமாரி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மகளிா் சுயஉதவிக் குழுவினா் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடனை சரியாக திருப்பிச் செலுத்தாததால்,அந்நிறுவன ஊழியா்கள் அளித்த நெருக்கடியே அவா் இறப்புக்கு காரணம் என உறவினா்கள் குற்றம்சாட்டினா்.
மேலும், முத்துமாரியின் கணவா் கருப்புசாமி மற்றும் உறவினா்கள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில், முத்துமாரியின் தற்கொலைக்கு காரணமான தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனா்.