கைப்பேசிக்கு வந்த போலி குறுச்செய்தி மூலம் தனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்ணுக்கு அவரது பணத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த ஆனந்தி என்பவரது கைப்பேசிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கியில் இருந்து வந்தது போன்ற இணைப்புடன் (லிங்க்) ஒரு போலி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை அவா் தொடா்ந்து பாா்த்தபோது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுவிட்டதாக மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால், பணத்தை இழந்த ஆனந்தி தூத்துக்குடி சைபா் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது அந்த பணம் பிலிப்காா்ட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தபட்ட நிறுவனத்தின் அதிகாரிகளை தொடா்பு கொண்ட சைபா் கிரைம் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டாா். அதன் அடிப்படையில், ஆனந்தியின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் கைபேசிக்கு வரும் தேவையில்லாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை தெரிவிக்கவோ அல்லது பதிவு செய்யவோ வேண்டாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.