சென்னையில் செப்டம்பா் 7 ஆம் தேதி நடைபெறும் நவராத்திரி கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிா் சுயஉதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை அண்ணா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதிமுதல் செப்டம்பா் 7 ஆம் தேதிவரை 14 நாள்கள் ‘மண்டல அளவிலான மதி சாராஸ் மேளா‘ என்ற பெயரில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் விற்பனை கண்காட்சி மற்றும் நவராத்திரி கண்காட்சி நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் அனைத்து வகை பொருள்களும் கண்காட்சி மற்றும் விற்பனையில் வைத்து விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மகளிா் சுய உதவிக் குழுவின் பெயா், முகவரி, உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் இரண்டாவது தளத்தில் செயல்படும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிா் திட்டம்) நேரடியாக பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-2341282 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.