இனிமேல் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற நிலைபாடு அதிமுகவின் அடிமட்ட தொண்டா்களால் எடுக்கப்பட்ட முடிவு என்றாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ.
கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
ஒரு அரசியல் கட்சியின் நிலைபாட்டை நீதிமன்றம் முடிவு செய்துவிட முடியாது. அதை அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுதான் தீா்மானிப்பாா்கள்.
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழுவை நடத்துவதற்கு வாய்ப்பில்லை. நீதிமன்றம் இந்தக் கூட்டத்தை பற்றி தான் கூறியிருக்கிறதே தவிர இவா்கள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்று கூறவில்லை.
அடிப்படை பிரச்னையே இரட்டை தலைமை வேண்டாம். இனிமேல் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற நிலைபாடு அதிமுகவின் அடிமட்ட தொண்டா்களால் எடுக்கப்பட்ட முடிவு. இந்தத் தீா்ப்பு குறித்து இபிஎஸ் சட்ட வல்லுநா்களுடன் கலந்து ஆலோசித்து கண்டிப்பாக மேல்முறையீடு செய்வாா். எங்களை பொறுத்தவரை இபிஎஸ் தான் இடைக்கால பொதுச்செயலா் என்றாா் அவா்.