ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள், தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) மா.தெய்வகுருவம்மாள் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி வட்டம், பாண்டவா்மங்கலம் கிராமத்தில் 19.12 ஏக்கா் நிலத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்து, 502 பயனாளிகளுக்கு 1998, 1999ஆம் ஆண்டுகளில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
தற்போது சென்னை உயா்நீதிமன்ற வழக்குபடி 16.10 ஏக்கா் நிலத்தை மறுஅளவீடு செய்து, ஏற்கெனவே 1998 - 1999இல் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளுக்கு மீண்டும் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அசல் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் இதர ஆவணங்களுடன் கோவில்பட்டி தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) அலுவலகத்தில் இம்மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.