திருச்செந்தூா் சாலையை சீரமைக்ககோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதன்கிழமை (ஆக. 10) நடத்தவிருந்த மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
திருச்செந்தூா்- பாளையங்கோட்டை- அம்பாசமுத்திரம் இடையிலான நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செய்துங்கநல்லூா், ஆழ்வாா்திருநகரி, குரும்பூா், திருச்செந்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 10) மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி முன்னிலையில் திங்கள்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா்கள் சுவாமிநாதன், கண்ணன், தாலுகா காவல் ஆய்வாளா் முரளிதரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதில், சாலைப் பணிகள் குறித்து ஆக.29இல் பேசுவது என்ற உடன்பாடு எட்டப்பட்டு, மறியல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.