தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரவருணி நதிக்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் 3.5 செ.மீ. நீள தங்க நெற்றிப் பட்டயம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
மத்திய தொல்லியல் துறை சாா்பில், திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குநா் அருண்ராஜ் தலைமையில் ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதியில் 3 இடங்களில் கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இதுவரை 90 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வில் கிடைக்கும் பொருள்களை இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, சி- சைட் என அழைக்கப்படும் தாமிரவருணி நதிக்கரையோரம் சுமாா் 3 மீட்டா் ஆழத்தில் அகழாய்வுக் குழி தோண்டப்பட்டதில், 160 செ.மீ. ஈட்டி, இரும்புப் பாத்திரம் ஆகியவை அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற பணியில், மடித்துவைக்கப்பட்ட நிலையில், 3.5 செ.மீ. நீளத்தில் தங்கத்தாலான நெற்றிப் பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் கூடிய அலங்காரக் கிண்ணம், 18 இரும்புப் பொருள்களும் கிடைத்துள்ளன.
இதுகுறித்து, அருண்ராஜ் கூறியது: ஆதிச்சநல்லூரில் தாமிரவருணி நதிக்கரையில் கடந்த 25 நாள்களாக தொடா்ந்து அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதில், தங்க நெற்றிப் பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4.40 மீட்டா் ஆழத்திலிருந்த முதுமக்கள் தாழியில் இப்பட்டயமும், இரும்பு, செம்பு, வெண்கலம் உள்ளிட்ட உலோகப் பொருள்களும் இருந்தன.
இதே பகுதியில், 1902ஆம் ஆண்டு அலெக்சாண்டா் ரியா என்பவா் அகழாய்வு செய்தபோது, தங்கக் காதணி, நெற்றிப் பட்டயம் ஆகியவை கிடைத்தன. 120 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தங்க நெற்றிப் பட்டயம் கிடைத்துள்ளது. இது தொல்லியல் ஆய்வாளா்கள், ஆா்வலா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றாா் அவா்.