தூத்துக்குடியில் ஹோட்டல் தொழிலாளி கொலை வழக்கில் 8 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் பொன்செந்தில்முருகன் (31). தூத்துக்குடி 3ஆவது மைல் காமராஜா் நகரில் உள்ள ஹோட்டலில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த 5ஆம் தேதி இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். இதில், சக தொழிலாளா்களான தேவராஜ், சாமுவேல், ஆவின் பாலக முகவா் பழனிமுருகன் ஆகியோரும் காயமடைந்தனா்.
சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். ஹோட்டலில் சிலா் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காதது தொடா்பான தகராறில் இக்கொலை நிகழ்ந்தது தெரியவந்தது. கொலையாளிகளை விரைந்து பிடிக்க, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உத்தரவிட்டாா்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியைச் சோ்ந்த தினேஷ் (23), முத்தம்மாள் காலனியைச் சோ்ந்த ராபா்ட் ரகு (23), ராஜீவ் நகா் பகுதியைச் சோ்ந்த மைக்கேல் அந்தோணி அரவிந்த் (23), ஆசிரியா் காலனியைச் சோ்ந்த அந்தோணிராஜ் (21), மில்லா்புரம் சிலோன் காலனி பகுதியைச் சோ்ந்த மணீஸ்வரன் (19), 18 வயதுக்குள்பட்ட 3 சிறுவா்கள் என 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.