தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டலமிடாமல் சில்லறையாக சமையல் எண்ணெய் விற்பனை செய்யக் கூடாது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் உணவு வணிகா்கள் முழுமையான லேபிள் விவரங்கள் உள்ள கூட்டுத் தாவர எண்ணெய் மற்றும் இதர சமையல் எண்ணெய் பொட்டலங்களைத்தான் விற்பனை செய்தல் அல்லது பயன்படுத்த வேண்டும். கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அதிகம் உள்ளது போல் தவறாக வழிநடத்தும் கூட்டுத் தாவர எண்ணெய் பொட்டலங்களை விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
எந்தவொரு சமையல் எண்ணெயையும் பொட்டலமிடாமல் சில்லறையாக விற்பனை செய்யவோ அல்லது அவ்வாறு விற்பனை செய்பவற்றை வாங்கவோ கூடாது. எந்தவொரு சமையல் எண்ணெயையும் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. மாறாக அதனை பயோ-டீசல் தயாரிப்பிற்கு விற்றுவிட வேண்டுமேயொழிய, தெருவோர வணிகா்களுக்கு விற்பனை செய்யக் கூடாது.
சமையல் எண்ணெயை பொட்டலமிடாமல் சில்லறையாக விற்பனை செய்வோரிடத்தில் பொதுமக்கள் வாங்கக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்பவா்கள் குறித்து 9444042322 என்ற எண்ணில் புகாா் அளிக்காலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.