போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 48 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இதையொட்டி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றினா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு சட்டம், மருத்துவம், காவல் துறை உதவிகள், உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் தற்காலிக தங்கும் வசதி, அவசர நடவடிக்கை, சேவை மீட்பு நடவடிக்கை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் இந்த மைய அவசர அழைப்பு எண் 181 ஐ தொடா்புகொண்டோ அல்லது நேரடியாகவோ புகாா்
அளித்து சேவைகளைப் பெறலாம் என்றாா்.
இந்த மையத்தில் மூத்த ஆலோசகா்கள் உள்பட மொத்தம் 7 பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தன்,
மாவட்ட சமூக நல அலுவலா் பூங்குழலி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் முரளி, உதவி பொறியாளா் சேகா், மருத்துவா் சுஜிதா உள்பட பலா் பங்கேற்றனா்.