தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையத்தின் 31ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடியில் புதன்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது மே 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 15 போ் உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 30 கட்ட விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், 31ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஆணையத்தின் முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
அப்போது, தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் ஆணையரும், தற்போதைய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வா்கீஸ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கண்ணன், பொறியாளா் சத்தியராஜ் ஆகியோா் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.
26ஆம் தேதி வரை விசாரணை நடைபெறுவதாகவும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 30 பேருக்கு ஆணையத்தின் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநபா் ஆணையத்தின் மூலம் இதுவரை 1,330 பேருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், 962 பேரிடம் நேரில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும், 1,237 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.