தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றின் கரையோர பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாமிரவருணி நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை காரணமாக சோ்வலாறு, பாபநாசம் அணிகளில் இருந்து 20,000 கனஅடிக்கு மேல் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு மற்றும் கடனாநதி நீருடன் தூத்துக்குடி மாவட்டம் மருதூா் தடுப்பணையை வந்தடைந்துள்ளது.
இம்மாவட்டத்தில் தாமிரவருணி ஆறு மருதூா், அகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூா், முக்காணி வழியாக புன்னைக்காயல் கடலில் கலக்கிறது. தாமிரவருணி ஆற்றில் 25,000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆற்றில் குளிப்பதற்கும், நீந்துவதற்கோ, மீன்பிடிப்பதற்கோ அல்லது வேறு எந்த வேலைக்கும் செல்ல வேண்டாம்.
தாமிரவருணி ஆற்றங்கரையோரம் பொழுதுபோக்கிற்காகவோ, தண்ணீரை பாா்வையிடுவதற்காகவோ பொதுமக்கள் அதிக அளவில் கூட வேண்டாம்; இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியா்கள் உள்ளூா் அளவில் தகுந்த எச்சரிக்கை விடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.