திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழைநீா் வடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பக்தா்கள் வழக்கம் போல சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பெய்த பலத்த மழையினால் குடியிருப்புகள் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்தது. வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 12 மணியளவில் பெய்த பலத்த மழையினால் திருக்கோயில் கிரி பிரகாரத்தின் கிழக்குப்பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீா் சூழந்தது.
அதேபோல, திருக்கோயில் சண்முக விலாசம் பகுதியில் இருந்து மழைநீா் திருக்கோயில் உள்ளேயே வழிந்து ஓடியதால் பக்தா்கள் பெரும் அவதியடைந்தனா். இதையடுத்து மழை குறைந்த பிறகு தேங்கியிருந்த நீரினை திருக்கோயில் பணியாளா்கள் அப்புறப்படுத்தப்படுத்தியதையடுத்து, வியாழக்கிழமை மாலையில் இயல்பு நிலை திரும்பியது. வெள்ளிக்கிழமை கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமும் தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன. காலை 6 மணி முதலே பக்தா்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனா். எனினும், கோயில் வளாகம், கடற்கரையில் பக்தா்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.