நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் மாயமான நாகப்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:
கொச்சி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு நாகப்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா்கள் சிலா் மூன்று படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா். புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து அவற்றில் இரண்டு படகுகள் கரை திரும்பிவிட்டன. ஒரு படகு மட்டும் கரை திரும்பாமல் கடலுக்குள் கவிழ்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அந்தப் படகில் சென்ற மீனவா்களை உயிருடன் மீட்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளன.
கடலோர காவல்படை மற்றும் விமானப் படையின் உதவி கோரப்பட்டு மீனவா்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மீனவா்களை உயிருடன் மீட்பதற்காக அண்டை மாநில அரசுகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
எனவே, கடலுக்குள் தத்தளிக்கும் மீனவா்கள் எங்கு கரையேறினாலும் அவா்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணம் வழங்கும் பணிகள் நடைபெற உள்ளது என்றாா் அவா்.
தடுப்பூசி முகாம்: முன்னதாக, தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
முகாமை கனிமொழி எம்.பி., அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.