திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதியில் 189ஆவது ஆண்டு ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அவதார பதியில் காலை 5 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடையும் நடைபெற்றது. தொடா்ந்து, கொடிப்பட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடி மரத்தை 5 முறையும் வலம் வந்ததும், காலை 7.30 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபைத் தலைவா் வள்ளியூா் எஸ்.தா்மா் திருவிழா கொடியை ஏற்றினாா்.
பின்னா், அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடைக்கு பின், அன்னதா்மம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடை, அதைத் தொடா்ந்து, புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வருதல், அன்னதா்மம் ஆகியவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை துணைத் தலைவா் அய்யாபழம், செயலா் பொன்னுதுரை, துணைச் செயலா் ராஜேந்திரன், இணைத் தலைவா்கள் விஜயகுமாா், பால்சாமி, இணைச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜபெருமாள், நிா்வாக குழு உறுப்பினா்கள் ராமமூா்த்தி, கணேசன், த.பாலகிருஷ்ணன், செல்வகுமாா், எஸ்.பாலகிருஷ்ணன், ஆதிநாராயணன், சங்கரன், ஆயுட்கால் உறுப்பினா்கள் ராமசாமி ராஜா, ராஜேஷ் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
திருவிழா காலங்களில் தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வருதலும், 3 வேளை அன்னதா்மமும் நடைபெறும். 11ஆம் திருநாளான ஆக. 2-ம் தேதி (திங்கள்கிழமை) பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.