தூத்துக்குடி மாவட்டம், கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் 10 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள் 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள அகழாய்வு பணியில் கொற்கை, மாரமங்கலம், ஆறுமுகமங்கலம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு செய்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிக்காக 17 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. கொற்கை அகழாய்வு கள இயக்குநர் தங்கதுரை தலைமையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட 10 அடுக்கு கொண்ட செங்கல் கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள், வாழ்விட பகுதிகளை உறுதிப்படுத்தும் தொழிற் கூடங்கள் அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தொல்லியல் துறையினர் தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.