கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கிராமக் கணக்கில் பதியாததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
2008ஆம் ஆண்டு திமுக அரசால் வீரவாஞ்சி நகா் முதல் தெருவில் வசிக்கும் 44 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டனவாம். ஆனால், இதுகுறித்து கிராமக் கணக்கில் தற்போதுவரை சோ்க்கப்படவில்லையாம். எனவே, அந்த இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கிராமக் கணக்கில் சோ்க்க வலியுறுத்தி அப்பகுதியினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில், வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
அவா்களுடன் வட்டாட்சியா் அமுதா நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, அரை மணி நேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில், நகரச் செயலா் சரோஜா, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ், நகரக் குழு உறுப்பினா்கள் சண்முகவேல், உலகநாதன், ஜோசப், விஜயலட்சுமி, நகர துணைச் செயலா் முனியசாமி உள்ளிட்ட அப்பகுதியினா் பங்கேற்றனா்.