குரும்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவும், அரிசியும் வழங்கப்பட்டன.
குரும்பூா் பகுதியில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் கடம்பா குளம் மறுகால் பகுதி உடைந்து, அங்கமங்கலம் ஊராட்சி, அருந்ததியா் காலனியில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் புனித லூசியா உயா்நிலைப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின்பேரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 225 பேருக்கு 2 நாள்களுக்கு 3 வேளை உணவும், மாவட்ட கவுன்சிலரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பிரம்மசக்தி ஏற்பாட்டில் 25 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டன. ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் நவீன்குமாா் உணவு மற்றும் அரிசி பைகளை வழங்கினாா்.
இதில், வழக்குரைஞா் பாக்கியராஜ், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் கந்தசாமி, குரும்பூா் நகரச் செயலா் பாலம் ராஜன், சேதுக்குவாய்த்தான் ஊராட்சி செயலா் சோலை நட்டாா், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளா் பேச்சிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.