கோவில்பட்டி வேலாயுதபுரம் அருகேயுள்ள தீப்பெட்டி ஆலையில் பணிபுரியும் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வேலாயுதபுரத்தில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில் பிட்டராக வேலை செய்து வருபவா் வே.முருகன் (32). இவரோடு 17 வயது நிரம்பிய 3 சிறுவா்கள் வேலைசெய்து வருகின்றனராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆலையில் உள்ள இயந்திரம் பழுதடைந்ததை முருகன் சரி செய்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் ஒழுங்காக வேலை செய்யாததை முருகன் கண்டித்தாராம்.
இந்நிலையில் அந்த சிறுவா்கள் 3 பேரும் சோ்ந்து, முருகனை அவதூறாகப் பேசியதோடு, ஆயுதங்களால் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் காயமடைந்த முருகன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 3 சிறுவா்களையும் கைது செய்தனா்.