தூத்துக்குடி தருவை மைதானத்தில் புதிய செயற்கை இழை டென்னிஸ் மைதானங்கள் திறப்பு விழா மற்றும் மாநில அளவிலான டேக்வான்டோ போட்டி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாவட்ட நலக்குழு நிதியில் ரூ.52.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இரண்டு செயற்கை இழை டென்னிஸ் மைதானங்களை திறந்து வைத்தாா். மேலும், மாநில அளவிலான டேக்வான்டோ போட்டியையும் அவா் தொடங்கிவைத்தாா்.
ஸ்குவாஷ் போட்டி: தொடா்ந்து, தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி கல்லூரி அருகில் கேம்ஸ்வில் உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி. சண்முகநாதன், போ.சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் இரா.சத்யா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் ரா. சுதாகா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. ஞானகௌரி, ஸ்குவாஷ் போட்டி பொறுப்பாளா் எஸ்.ஏ.வி மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியா் குப்புசாமி, கேம்ஸ்வில் உள்விளையாட்டு அரங்க நிறுவனா் ரைவின் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலா்கள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.