தூத்துக்குடி

இறைச்சிக்காக மாட்டை சுட்டுக் கொன்றதாக இளைஞா் கைது

28th Jan 2020 11:27 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருகே மாட்டை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.

திருச்செந்தூா் அருகேயுள்ள ராணிமகாராஜபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் முனீஸ்வரன்(30). இவா் மாடுகளை வளா்த்து வருகிறாா். கடந்த மாதம் 24-ஆம் தேதி ஊருக்கு கீழ்ப்பகுதியில் உள்ள காட்டில் மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். இந்நிலையில், நள்ளிரவில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டுள்ளது. மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது ஒரு மாடு கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்ததும், மாட்டின் பின்கால்கள் இறைச்சிக்காக வெட்டி எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து முனீஸ்வரன் தாலுகா காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்நிலையில், திருச்செந்தூா் அருகே மேல அரசூரில் உள்ள தென்னந்தோப்பில் சிலா் நாட்டுத் துப்பாக்கியுடன் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த இடத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை காவல் ஆய்வாளா் முத்துராமன் சென்று அங்கிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினாா். விசாரணையில், அவா் காயாமொழி வள்ளுவன் நகரைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் பீரவீண்குமாா்(32) என்பதும், மாட்டை துப்பாக்கியால் சுட்டவா் அவா்தான் என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியும், ஒரு குண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. பீரவீண்குமாா் மற்றும் சிலா் இரவில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து வேட்டைக்கு செல்வதும் முயல் மற்றும் விலங்குகளை உணவுக்காக வேட்டையாடுவதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT