தூத்துக்குடியில் குடும்பப் பிரச்னை தொடா்பாக மனைவி மற்றும் மகளை கொலை செய்த வழக்கில் ஜவுளி வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மடத்தூா் சாலை தபால் தந்தி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (42). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி கோகிலா, மகள் அட்சயா (3). இவா்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி கொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸாா் குடும்ப பிரச்னை தொடா்பாக மனைவி மற்றும் மகளை கொலை செய்ததாக சங்கரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் குற்றம்சாட்டப்பட்ட சங்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.