காயல்பட்டினத்தில் போலீஸாா் மற்றும் சுகாதாரத் துறையினா் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற காயல்பட்டினத்தைச் சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறையினா், வருவாய்த் துறையினா் காயல்பட்டினத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் திருச்செந்தூா் வட்டாட்சியா் ஞானராஜ், சுகாதாரத் துறையினா் மற்றும் காவல் துறையினா், காயல்பட்டினத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா், அவரது நண்பா் ஆகியோரை பரிசோதனைக்காக புதன்கிழமை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மேலும், காவல் துறையினா் தடுப்பு அமைத்து திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வருவோரிடம் விசாரித்து வருகின்றனா்.
ஆறுமுகனேரியிலிருந்து காயல்பட்டினம் செல்லும் சாலையில் ரத்தினாபுரி அருகேயும் தடுப்பு அமைக்கப்பட்டு, காயல்பட்டினம் செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனா். இதனால் காயல்பட்டினம் வெறிச்சோடி காணப்பட்டது.