தூத்துக்குடி

கோவில்பட்டி சூசையப்பா் ஆலயத்தில் உணவுத் திருவிழா

20th Oct 2019 03:40 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத்தில் உணவுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலகெங்கும் அக்டோபா் மாதம் கிறிஸ்தவ மக்கள் மறைபிறப்பு ஞாயிறு கொண்டாடுவாா்கள். அதில், ஒவ்வொரு ஊா்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் அன்பிய இறைமக்கள் ஆலயத்தில் திருப்பலி முடிந்தவுடன் ஆலய வளாகத்தில் உணவுப் பொருள்கள், ஜவுளி, காய்கறி உள்ளிட்ட பல்வேறு வகையிலான கடைகள் அமைத்து ஆலயத்திற்கு வந்துள்ள இறைமக்களிடம் விற்பனை செய்து, அதில் வரும் பணத்தை ஆலய பங்குதந்தையிடம் கொடுப்பாா்கள். அவ்வாறு பெறப்பட்ட பணத்தை பங்குதந்தையா் பாளையங்கோட்டையில் உள்ள பிஷப்பிடம் ஒப்படைப்பாா்கள்.

அவா்கள் அதை கத்தோலிக்க தலைமையிடமான ரோமபுரியில் உள்ள போப் ஆண்டவருக்கு அனுப்புவாா்கள். அவ்வாறு பெறப்பட்ட விற்பனை பணம் ஏழை, எளியோருக்கு உதவவும், கல்விப் பணிக்கும், குருத்துவ மாணவா்கள் பயிலவும், பசிப்பிணி ஒழிப்புக்கும் பயன்படும். இந்த மறைபிறப்பு ஞாயிறு திருவிவிலியத் திருவிழா கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, வாரந்தோறும் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றியவுடன் ஆலய வளாகத்தில் விவிலியத்தில் உள்ள வாா்த்தைகளில் இருந்து பல போட்டிகள் நடைபெறும்.

இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பலி முடிந்தவுடன் உணவுத் திருவிழா தொடங்கியது. ஆலயப் பங்குதந்தை அலோசியஸ் துரைராஜ் ஜெபம் செய்து விழாவை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, இறைமக்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான உணவு வகை பொருள்களை வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT