சாத்தான்குளம் அருகே விவசாய நிலங்களில் க தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பேய்க்குளத்தில் இருந்து கொம்பன்குளம் வழியாக மேட்டுக்குடியிருப்பு குளத்தின் அருகே சாலை மற்றும் விவசாய நிலங்களில் உயர் மின்அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால், மின் விபத்து நிகழும் அபாயம் உள்ளது.
இந்த உயர் மின் அழுத்த கம்பிகளில் மின்சாரம் எந்நேரமும் செல்வதால் விவசாய நிலங்களுக்குள் விவசாயிகள் அச்சத்துடன் சென்று திரும்புகின்றனர். இதனால் அந்த நிலத்தில் விவசாயப் பணிகளை தொடர முடியாத நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் மின்கம்பமும் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நிகழாதவாறு, தாழ்வாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பிகளை உயர்த்திக் கட்டவும், பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.