இளைஞரை கொல்ல முயற்சி: இருவர் கைது
கோவில்பட்டியில் இளைஞர் உள்பட 2 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டான் மருதையா காம்பவுண்டைச் சேர்ந்த கணபதி மகன் சங்கர் (23). இவர் மற்றும் இவரது உறவினர் செல்வம் ஆகிய 2 பேரும் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி - நாலாட்டின்புத்தூர் அணுகுசாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது 2 பேர் பைக்கை வழி மறித்து அரிவாளால் தாக்க முயன்றார்களாம். இதுகுறித்து, சங்கர் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இந்திரா நகரைச் சேர்ந்த சங்கரசுப்பு மகன் ஹரிஹரசுதன்(27) மற்றும் செல்லப்பாண்டி மகன் மாரியப்பன்(26) என்பது தெரியவந்தது.
சங்கர் மற்றும் ஹரிஹரசுதன்,மாரியப்பன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும்,அதையடுத்து சங்கரை கொலை செய்ய முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரையும் கைது செய்தனர்.