ஆறுமுகனேரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும் சார்பு நீதிபதியுமான ஆர்.சாமுவேல் பெஞ்சமின் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார். கிராம உதயம் நிர்வாக பொறுப்பாளர் இராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
முகாமில் நீதிபதி பேசுகையில், முதியோர் ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, இலவச கல்வி திட்டம் மற்றும் ஜீவனாம்சம் பெறுதல் போன்றவை குறித்து விளக்கம் அளித்தார். இம்முகாமில் பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பகுதி பொறுப்பாளர் ப. பிரேமா வரவேற்றார். தன்னார்வ தொண்டர் ஏ.ஆனந்த் செல்வன் நன்றி கூறினார்.