குலசேகரன்பட்டினம் அருள்தரும் காரைக்காலம்மையார் திருக்கோயிலில் மாங்கனித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 10 மணிக்கு அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் திருநெல்வேலி திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழு சார்பில் காரைக்காலம்மையார் இயற்றிய பதிகப் பாடல்கள் அம்மையாரின் பெரியபுராண வரலாற்றுப் பாடல்கள் முற்றோதப்பட்டது. தொடர்ந்து, பகல் 2 மணிக்கு மழை வேண்டி திருஞானசம்பந்தரின் மழைப் பதிகம் பாராயணம் செய்யப்பட்டது. மாலை 4.30 மணிக்கு காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் மாங்கனி படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன . பின்னர் பக்தர்களுக்கு மாங்கனி வழங்கப்பட்டது. இதில் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம், வழிபாட்டுக் குழுத் தலைவர் அகஸ்தீசுவரன், செயலர் காளியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஆ.இல்லங்குடி,சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.