கோவில்பட்டி இனாம்மணியாச்சியில் ஞாயிற்றுக்கிழமை சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கோவில்பட்டியை அடுத்த மைப்பாறை, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ராஜ் (55). மனநிலை பாதிக்கப்பட்ட இவர், இனாம்மணியாச்சி புறவழிச்சாலையிலுள்ள திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றாராம். அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.