ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடியில் அடையாள அட்டை சான்றாக 12 வகையான ஆவணங்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 27) மற்றும் திங்கள்கிழமை (டிச. 30)இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக 12 வகையான ஆவணங்கள் உபயோகப்படுத்தப்படலாம் என தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய சட்டபூா்வ ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), ஓட்டுநா் உரிமம், பணியாளா் அடையாள அட்டை (மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணிபுரிபவா்கள்).
வங்கி மற்றும் அஞ்சலகங்களின் கணக்கு புத்தகங்கள், வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மாா்ட் காா்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை (புகைப்படத்துடன் கூடியது), மருத்துவ காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை (மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடியவை), ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது), அலுவலக அடையாள அட்டை (மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டது), ஆதாா் அட்டை ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச்சென்று வாக்களிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.