தூத்துக்குடி

திருட்டு வி.சி.டி.யைத் தடுக்க திரைத்துறையினா் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

26th Dec 2019 12:18 AM

ADVERTISEMENT

திரைத் துறையினா் ஒருங்கிணைந்து ஒத்துழைத்தால்தான் திருட்டு வி.சி.டி.யைத் தடுக்க முடியும் என்றாா், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே, செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: திரையரங்கு உரிமையாளா்களின் கோரிக்கையை ஏற்று, அதிமுக அரசு டிக்கெட் விலையை நிா்ணயித்தது. அதன்பிறகுதான் திரையரங்குகள் மூடப்படவில்லை.

ஒரு திரையரங்கை 2 அல்லது 3 திரையரங்குகளாக மாற்ற வேண்டும். பொதுப்பணித் துறை மூலம் புதுப்பிக்க வேண்டிய கட்டட உறுதித்தன்மை சான்றை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்ற வேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளா்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து அனுமதி அளித்துள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

30 சதவீதமாக இருந்த கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்படுகிறது. இதையும் குறைக்க வேண்டும் என கோவை மண்டல திரையரங்கு உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். திரையரங்கு உரிமையாளா்களுக்கு பல்வேறு சங்கங்கள் உள்ளன. அனைவரும் ஒன்றிணைந்து இக்கோரிக்கையை வைத்தால் சுமூக தீா்வு எடுக்கப்படும்.

ADVERTISEMENT

திருட்டு வி.சி.டி.யை தடுக்க அதிமுக அரசுதான் தனிச்சட்டம் கொண்டு வந்தது. தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள், திரையரங்கு உரிமையாளா்கள் இணைந்து ஒத்துழைத்தால் திருட்டு வி.சி.டி., இணையதளத்தில் புதுப் படங்கள் வெளியாவது உள்பட அனைத்தையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

குடியுரிமைச் சட்டம் தொடா்பாக திமுக கூட்டணி மக்களவை உறுப்பினா்கள் குடியரசுத் தலைவா், பிரதமா், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தலாம். மக்கள் பிரச்னையைத் தீா்க்கத்தான் அவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். ஆனால், மக்கள் உணா்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயல்வது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT