தூத்துக்குடியில் வரும் செப். 6 ஆம் தேதி தொடங்கவுள்ள தொழில் முனைவோர் பயிற்சி முகாமில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்க (துடிசியா) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கம் (துடிசியா) சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு முகாம் தூத்துக்குடி முத்தம்மாள்காலனியில் உள்ள துடிசியா அலுவலகத்தில் வரும் செப். 6 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
15 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் தொழில் வகைகள், தொழிலை தேர்ந்தெடுக்கும் முறைகள், தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறும் வழி முறைகள், வங்கியின் எதிர்பார்ப்புகள், தொழில் தொடங்க தேவையான அரசு பதிவுகள், சந்தை ஆய்வு, தொழிற்சாலை மின் இணைப்பு பெறும் வழிமுறைகள், தலைமைப் பண்புகள், இலக்கு நிர்ணயித்தல், நிதி வழங்கும் நிறுவனங்கள், நிதி நிர்வாகம், வர்த்தக கணக்கு எழுதும் முறை, மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், சலுகைகள் பெறும் முறைகள், தொழில்காப்பீடு மற்றும் தொழிலாளர் காப்பீடு முறைகள், தொழிற்சாலைகளை நேரடியாக பார்வையிட அழைத்துச் செல்லுதல், வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் நேரடி கலந்துரையாடல், சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவும் நவீன தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்று வழங்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தகுதியுள்ளதொழில் முனைவோர் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி ரூ. 5 கோடி வரை 25 சதவீதம் மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்க உதவியாக இருக்கும்.
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 55 வயதுக்குள்பட்ட தொழில் தொடங்க ஆர்வமுள்ள ஆண், பெண் இரு பாலரும் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் முத்தம்மாள்காலனி ராம்நகரில் இயங்கி வரும் துடிசியா அலுவலகத்தில் செப். 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0461-2347005 என்ற தொலைபேசி எண், 9840158943, 9791423277 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.