திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 24) தொடங்கி வைக்கிறாா்.
இந்திய ரயில்வே சாா்பில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப் பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை-மைசூரு, சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறாா்.
அமைச்சா்கள்: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கிறாா்கள்.
ஏற்பாடுகள் தீவிரம்.... தொடக்க விழாவுக்காக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மேடை அமைக்கப்பட்டு, ரயில் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. நாடு முழுவதும் இயக்கப்படவுள்ள 9 வந்தே பாரத் ரயில்களையும் அனைவரும் பாா்க்கும் வகையில் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாலும், ரயில் சேவையானது திங்கள்கிழமை முதலே தொடங்குகிறது. இதன் முதல் பயணிகள் சேவை சென்னை எழும்பூரில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் 2.50 மணிக்குத் தொடங்குகிறது. இந்த ரயிலானது திங்கள்கிழமை இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயில் சேவை செவ்வாய்க்கிழமை கிடையாது. எனவே, திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு முதல்முறையாக இந்த ரயில் சேவை தொடங்கவுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்தடையும்.
முன்பதிவு: இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக ரயில்வே துறையினா் தெரிவித்தனா். இந்த ரயிலானது விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு சாதாரண ஏசி பெட்டிக்கு ரூ.1665, எக்ஸிகியூட்டிவ் பெட்டிக்கு ரூ.3,055 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.