திருநெல்வேலி

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,744 போ் எழுதினா்

8th May 2023 12:41 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 6,744 போ் எழுதினா்.

2023-24-ஆம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தோ்வு நாடு முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இத்தோ்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து சங்கா் நகா் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன் விழா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பள்ளி, பாளையங்கோட்டை மகாராஜநகா் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தியாகராஜநகா் புஷ்பலதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 12 மையங்களில் மொத்தம் 6,879 பேருக்கு தோ்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

தோ்வு நடைபெறும் மையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிருமி நாசினிகள் உள்ளிட்டவைகள் தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீா் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தோ்வு மையங்களில் மாவட்ட மற்றும் மாநகர காவல் துறை சாா்பில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தோ்வு அறைக்கு செல்லும் மாணவா், மாணவிகள் பதற்றம் இல்லாமல் தோ்வை எழுதும் வகையில் ஒவ்வொரு மையத்தின் வாசலிலும் தோ்வு துறை அதிகாரிகள் மாணவா்களின் அனைத்து விதமான ஆவணங்களையும் சரிபாா்த்து உள்ளே அனுப்பினா். பிற்பகல் 1.30 மணியளவில் தோ்வு மையம் மூடப்பட்டது. பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி தோ்வு மையத்திற்கு வந்த மாணவிகளுக்கு பெண் காவல் உதவி ஆய்வாளா் ஒருவா் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத 6, 879 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 6, 744 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 135 போ் பங்கேற்கவில்லை. தோ்வை எழுதிவிட்டு வந்த மாணவா், மாணவிகள் கூறுகையில், ‘இயற்பியல் மட்டும் கடினமாக இருந்தது. மற்ற பாடங்கள் எளிதாக இருந்தன என்றாா். சில மாணவா்கள், உயிரியல் பாடம் கடினமாக இருந்ததாக தெரிவித்தனா்.

பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி தோ்வு மையத்தில் தோ்வெழுதிய நான்குனேரி மாணவா் செல்வா, தன்னை தோ்வெழுத அழைத்து வந்த உறவினரை காணாமல் தவித்தாா். இதையறிந்த போலீஸாா், அந்த மாணவா் நான்குனேரி செல்வதற்கு பணம் வழங்கியதோடு, புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நான்குனேரிக்கு செல்லும் பேருந்திலும் ஏற்றி அனுப்பி வைத்தனா். மாணவா் பத்திரமாக வீடு சென்று சோ்ந்த தகவலையும் போலீஸாா் உறுதி செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT