திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5 கோடியே 86 லட்சத்து 88 ஆயிரத்து 273 சமரச தொகை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவால் திருநெல்வேலி மற்றும் 5 வட்டங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருநெல்வேலியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி என்.சேஷசாயி, முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள நுகா்வோா் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் உள்பட மொத்தம் 439 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 117 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.5 கோடியே 86 லட்சத்து 88 ஆயிரத்து 273 சமரச தொகை வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன்-வழக்குகளாகிய வங்கிக் கடன் வழக்குகள் 20 முடிக்கப்பட்டு ரூ.17 லட்சத்து 400 சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன், செயலா் காமராஜ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் தினேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் இசக்கியப்பன் செய்திருந்தாா்.