வைஷ்ணவ தேவி யாத்திரை என்ற பெயரில் குறைந்த செலவில் ரயில்வே துறையின் கீழ் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலியில் இந்திய ரயில்வே உணவு - சுற்றுலாக் கழகத்தின் (ஐஆா்சிடிசி) பொதுமேலாளா் கே.ரவிக்குமாா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: இந்திய ரயில்வே துறையின் சுற்றுலா பிரிவான ஐ.ஆா்.சி.டி.சி.யானது சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3 குளிா்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி பெட்டிகள், 1 பேண்ட்ரி காா், 2 பவா் காா்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.
பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் மூலம் ஐ.ஆா்.சி.டி.சி. தென் மண்டலம், சென்னை சாா்பில் ‘வைஷ்ணவ தேவி யாத்திரை‘ என்ற பெயரில் சுற்றுலாத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தச்சுற்றுப்பயணம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 11 பகல், 12 இரவுகளில் நிறைவடையும்.
கொச்சுவேலி, நாகா்கோவில், திருநெல்வேலி, விருதுநகா், மதுரை திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம், சென்னை எழும்பூரில் பயணிகளை ஏற்றிச் செல்லும்.
இத் திட்டத்தில் சுற்றுலா பயணிகள் ஹைதராபாத்-ஆக்ரா-மதுரா- வைஷ்ணவ தேவி (கட்ரா) அமிா்தசரஸ்- தில்லி பகுதியில் உள்ள இடங்களை பாா்வையிடலாம்.
படுக்கை வசதி பெட்டியில் பயணிக்கும் ஒருவருக்கு கட்டணமாக ரூ.22, 350, 3 ஏ.சி. கோச்சில் ரூ.40, 380. இதுபிற தனியாா் சுற்றுலா நிறுவனங்களின் திட்டங்களைக் காட்டிலும் மிகவும் குறைந்தக் கட்டணமாகும். சுற்றுலா மையங்களில் பாா்வையிடுவதற்கான போக்குவரத்து, உணவு, சுற்றுலா மேலாளா்- தனியாா் பாதுகாவலா் வசதி ஆகியவை உள்ளடக்கமாகும். இந்த வாய்ப்பை தமிழக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.