திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலையோர வியாபாரிகள் புதிய கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை(பிப்.27) தொடங்குகிறது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டத்தின் கீழ், தகுதியான சாலையோர வியாபாரிகளின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திட நடப்பாண்டில் புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
கணக்கெடுக்கும் பணியானது வரும் திங்கள்கிழமை தொடங்கி, மாா்ச் இறுதி வரை நடைபெறும். கணக்கெடுப்பு பணியாளா் கோரும் விவரங்கள், ரேஷன் காா்டு நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், போன்ற ஆவணங்களை பணி செய்ய வரும் பணியாளா்களிடம் வழங்கிட வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.