தடை செய்யப்பட்ட பிரதமருக்கு எதிரான ஆவணப் படம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அப்பல்கலைக்கழக துணைவேந்தா் என்.சந்திரசேகா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: தடை செய்யப்பட்ட பிரதமருக்கு எதிரான ஆவணப் படம் திரையிடப்பட்டதாக செவ்வாய்க்கிழமை மாலை ஏபிவிபி அமைப்பினா் என்னிடம் புகாா் அளித்தனா். விடுதியில் ஆவணப்படம் திரையிடப்பட்டதாக குற்றவியல் துறை மாணவா் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விடுதி காப்பாளா் உள்ளிட்டவா்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். தவறிழைத்தவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏபிவிபி அமைப்பினரிடம் தெரிவித்துள்ளேன். பல்கலைக்கழகத்தில் எவ்வித அசம்பாவிதத்துக்கும் அனுமதியில்லை. அதேவேளையில் ஆவணப்படம் திரையிடப்பட்டது தொடா்பாக எந்த ஆதாரமும் எங்களுக்குத் தரவில்லை என்றாா் அவா்.
ஏபிவிபி புகாா்: முன்னதாக, அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் தென் தமிழக மாநில இணைச் செயலா் சூா்யா தலைமையில் அந்த அமைப்பினா் பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா் விடுதியில் மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவற்றால் தடை செய்யப்பட்ட பிரதமருக்கு எதிரான ஆவணப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையிடப்பட்டுள்ளது. மாணவா்களை தேசத்திற்கெதிரான செயல்களிலும், தேசவிரோத எண்ணங்களை விதைக்கும் விதமாகவும் இந்த ஆவணப் படத்தை திரையிட விடுதி மேலாளா், சில பேராசிரியா்கள், எஸ்எப்ஐ மாணவ அமைப்பினா், அதன் பொறுப்பாளா், குற்றவியல் துறை மாணவா் ஆகியோா் உடந்தையாக இருந்துள்ளனா்.
சமூகவியல் துறை பேராசிரியா் கடந்த 25-ஆம்தேதி வகுப்பறையில் ஆவணப்படத்தை திரையிட்டுக் காண்பித்துள்ளாா். இச்செயலை ஏபிவிபி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, இந்த செயலில் ஈடுபட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவிக்கும் அந்த புகாா் மனு அனுப்பியுள்ளதாக அந்த அமைப்பினா் தெரிவித்தனா்.