திருநெல்வேலியில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத இரு நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023 மாா்ச் மாதத்திற்கான குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், தொழில் சம்பந்தமாக குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையரின் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்குள்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சிறப்பாய்வு மேற்கொண்டனா்.
குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் 59 கடைகள் மற்றும் நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டபோது குறைந்தபட்ச ஊதியம் வழங்காத இரண்டு நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்கள் மீது மனு தாக்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கக் கோரி திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் அலுவலகத்தில் கேட்பு செய்யப்பட்டுள்ளது.