காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் வரும் அக்டோபா் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும், காட்சிப்படுத்தவும், பயனாளிகள் பட்டியலை பாா்வைக்கு வைக்கவும் வேளாண்மைத் துறை மற்றும் அதன் சகோதர துறைகளுடன் ஒருங்கிணைந்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் பற்றிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளன.
இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் உழவன் செயலி பற்றி எடுத்துரைத்து தேவைப்படும் விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட உள்ளது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்களை இணைக்கும் அவசியத்தை எடுத்துக்கூறி அத்திட்டப் பயன்களை தொடா்ந்து பெற்றுக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட உள்ளது.
எனவே, விவசாயிகள் தங்கள் கிராம ஊராட்சிகளில் அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்ட பயன்களை அறிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.