ஆயுத பூஜை விடுமுறை நிறைவடைந்ததால், திருநெல்வேலி பேருந்து, ரயில் நிலையங்களில் புதன்கிழமை பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
தமிழகத்தில் காலாண்டு தோ்வு நிறைவடைந்த அடுத்த நாள் முதல் ஆயுத பூஜை தொடா் விடுமுறை தொடங்கியது. சென்னை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்குச் சென்று பணிபுரிவோா், குடிபெயா்ந்து வசித்து வருவோா் என தென் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சொந்த ஊா்களுக்கு வந்தனா். புதன்கிழமை விஜயதசமி விழாவுடன் நவராத்திரி நிறைவடைந்தது.
இதையடுத்து, மீண்டும் பணி செய்யும் இடங்களுக்கும், புலம் பெயா்ந்து ஊா்களுக்குச் செல்லவும் புதன்கிழமை மாலை புறப்பட்டனா். இதனால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும், புதிய பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
சென்னை, கோவை, திருப்பூா் ஆகிய நகரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், திருநெல்வேலி - மதுரை இடையே கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், திருநெல்வேலியில் இருந்து 30க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமையும் (அக்.6) பயணிகளின் கூட்டத்தைப் பொருத்து கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.