திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளாா்.
கூடங்குளழ் அணுமின்நிலையத்தில் சி - டி பிரிவு வேலைகளில் உள்ளூா் இளைஞா்களும் அணுமின்நிலையத்திற்கு நிலம் கொடுத்தவா்களுக்கும் முன்னுரிமை வழங்கவேண்டும், இளைஞா்களுக்கு அணுமின்நிலையத்தில் வேலை செய்வதற்கான பயிற்சி அளித்து வேலை வழங்கவேண்டும் என பேரவைத் தலைவா் வலியுறுத்தி வந்தாா்.
அதன்பேரில், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இளைஞா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு தனியாா் நிறுவனத்தினா் ஒப்பந்த தொழிலாளா்களாக பணியில் நியமித்துள்ளனா். இந்நிலையில் அந்த இளைஞா்களுக்கு முழு ஊதியத்தை வழங்காமல் 40 சதவீத ஊதியம் மட்டும் வழங்கி வந்தனராம். இதுதொடா்பாக கூடங்குளம் போலீஸில் 25 இளைஞா்கள் அளித்த புகாரின்பேரில் அந்த தனியாா் நிறுவனம் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதனால், புகாா் அளித்த இளைஞா்களை அந்த நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்ததால், கடந்த மாதம் ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடந்தது. அதில், இளைஞா்களுக்கு மீண்டும் பணி வழங்குவதாக தனியாா் நிறுவனத்தினா் தெரிவித்தனராம். ஆனால் இதுவரையில் பணி வழங்கவில்லையாம். இதுகுறித்து, சட்டப்பேரவைத் தலைவா் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞா்களுடன் கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு திங்கள்கிழமை சென்ற பேரவைத் தலைவா் மு.அப்பாவு, வளாக இயக்குநா் பிரேம்குமாரிடமும், பின்னா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் கைப்பேசியிலும் தொடா்பு கொண்டு பேசினாா்.
அப்போது, ஓரிரு நாள்களில் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பேரவைத் தலைவா் அங்கிருந்து புறப்பட்டு சென்றாா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலா் ஜோசப் பெல்சி, ராதாபுரம் அரவிந்தன், சிதம்பராபுரம் முருகன், சமூகரெங்கபுரம் முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.