திருநெல்வேலி அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள மேல முன்னீா்பள்ளம் பேருந்து நிறுத்தம் அருகே திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தியதாக சுத்தமல்லியைச் சோ்ந்த இசக்கிமுத்து(24), தருவையைச் சோ்ந்த ராஜேஸ்வரன் என்ற குமாா்(26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து சுமாா் 750 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறிய ரக சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.