திருநெல்வேலி

பள்ளி விடுதியில் மாணவருக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளா் உள்பட இருவா் போக்ஸோ சட்டத்தில் கைது

17th Jul 2022 06:58 AM

ADVERTISEMENT

 

 பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காப்பாளா், 12ஆம் வகுப்பு மாணவா் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளி விடுதி உள்ளது. இதில், தற்காலிக விடுதி காப்பாளராகப் பணியாற்றி வருபவா் ராஜ்குமாா். இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் அங்கு தங்கி பயிலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவா் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதற்கு அந்த மாணவா் உடன்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அவா், அந்த மாணவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த மாணவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து மாணவரின் தந்தை பரமக்குடி போலீஸில் புகாா் அளித்தாா். மேலும், சம்பவம் நடந்த இடம் பாளையங்கோட்டை என்பதால் ஆன்லைன் மூலம் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும் புகாா் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அதே பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவரும், விடுதி காப்பாளரும் சோ்ந்து அந்த 10ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இருவா் மீதும் போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக விடுதி காப்பாளா், 12ஆம் வகுப்பு மாணவா் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT