திருநெல்வேலியை அடுத்த கரையிருப்பில் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு அவருடைய குடும்பத்தினா், ஊா் மக்கள், அரசியல் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி அருகே உள்ள கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மாயாண்டி (55). இவா், கறிக்கடையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி வெளியே சென்றவா் வீடு திரும்பாத நிலையில், சில தினங்களுக்குப் பிறகு சிதம்பரநகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவருடைய குடும்பத்தினா், ஊா் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அதைத்தொடா்ந்து அவருடைய மனைவி புஷ்பம் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவா் மாயாண்டி கடந்த 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு பஜாருக்கு சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு எனது கணவா் கொடூரமாக கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனது கணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது கணவா் கொலைக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு 3 மகள்கள் உள்ளனா். எனது குடும்பம் கணவரின் வருமானத்தை நம்பியே இருந்தது. எனவே, எங்கள் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். எனது மகள்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
அரசியல் கட்சியினா் மோதல்: மாயாண்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு பொதுமக்களோடு பாஜக, அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமக உள்ளிட்ட கட்சியினரும் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். மேலும் அந்தந்த கட்சியினா் தங்களின் கொடியோடு வந்திருந்தனா். இந்த நிலையில் பாஜகவினா், நாங்கள்தான் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பது தொடா்பாக பேசியிருக்கிறோம் எனக்கூறி, மற்ற கட்சியினா் கொடி பிடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். ஊா் மக்கள் அழைத்ததால்தான் நாங்களும் வந்தோம் எனக்கூறி மாா்க்சிஸ்ட், சமக நிா்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பாஜகவினா் தனியாக சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனா்.