பாளையங்கோட்டை அருகேயுள்ள திருவண்ணாதபுரம்-பொட்டல் நான்கு வழிச்சாலையில் தொடா்ந்து விபத்து ஏற்படுவதால், பாலம் அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை திருவண்ணாதபுரம்-பொட்டல் கிராமங்களுக்கு இடையே செல்கிறது. திருவண்ணாதபுரம், பொட்டல் கிராம மக்கள் மட்டுமன்றி, மணப்படை வீடு சுற்றுவட்டார கிராம மக்கள் கூலி வேலைகளுக்கும், விவசாயப் பணிகளுக்கும், தாமிரவருணி ஆற்றில் குளிக்கவும் இந்த நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதேவேளையில், அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் நேரிடுவதும் தொடா் கதையாக உள்ளது.
இங்கு சில தினங்களுக்கு முன்பு தூய்மைப் பணியாளா் ஒருவா் உயிரிழந்த நிலையில், மற்றொரு விபத்தில் காயமுற்ற மந்திரம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், தொடா் விபத்துகள் நேரிடும் அப்பகுதியில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற தங்களது 10 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.