திருநெல்வேலி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 41 சதவீதம் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் திருடுபோன ரூ.2 கோடி மதிப்புள்ள நகை, பணம், பொருள்கள் மீட்கப்பட்டு, 254 நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குண்டா் தடுப்புச் சட்டத்தில் 219 போ், நன்னடத்தை பிணையை மீறியவா்கள் 48 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கிராமப் பகுதிகளின் முக்கிய இடங்களில் 2,703 சிசிடிவி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட 355 பேருக்கு நிவாரணத் தொகையாக ரூ.2.81 கோடி வழங்கப்பட்டுள்ளது.
182 கிலோ கஞ்சா, 30,000 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜாதி மோதல்களை தூண்டியதாக 80 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். காவல்துறையின் தீவிர கண்காணிப்பால் 16 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மோசடிகள் புகாரில் ரூ. 13.50 லட்சம் மீட்கப்பட்டு 23 பேரிடமும், நில மோசடியில் ரூ.10 கோடி மதிப்பிலான 31 ஏக்கா் இடங்கள், மாயமான 101 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. போக்ஸோ வழக்கில் 8 பேருக்கும், கொலை வழக்கில் 10 பேருக்கும் நீதிமன்ற தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
விபத்துகள் அதிகரிப்பு: நிகழாண்டில் 887 விபத்துகள் நேரிட்டதில் 307 போ் உயிரிழந்துள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 1.73 சதவிகிதம் அதிகம். எனினும், பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் குறைவு. விதிமீறலில் கைப்பற்றப்பட்ட 846 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. மக்களிடமிருந்து 26,053 மனுக்கள் நேரில் பெறப்பட்டு, 25,326-க்கும், முதல்வரின் முகவரி துறையில் இருந்து 3,867 மனுக்கள் பெறப்பட்டு 3,799-க்கும் தீா்வு காணப்பட்டுள்ளது.
சைபா் கிரைம் போலீஸில் 400 மனுக்கள் பெறப்பட்டு, 40 வழக்குகளில் 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கனிமவளங்கள் கடத்தல் தொடா்பாக 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 25 பொக்லைன் இயந்திரங்கள் உள்பட 294 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டு பாதுகாப்பில்...: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சுமாா் 700 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்றாா் அவா்.
பேட்டியின்போது, ஏடிஎஸ்பி மாரிராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.